சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் பேசியிருப்பது, தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாக மருத்துவத்துறையில் உள்ள அவலங்களை சரி செய்து மாற்றத்தைத் தருவோம் என ஆட்சிக்கு வந்த தவெக, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்தும் “மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் எலித்தொல்லை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள், கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை உள்ளிட்ட அவலங்களை சரி செய்யாமல், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவோ, நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை வழங்கவோ எந்தவித ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பையும் எடுக்காமல், தமிழகத் தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் போதும் அவர்கள் அரசு மருத்துவமனைகளைத் தேடி வருவார்கள் என்ற தொனியில் அத்துறை அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, “ஆட்சிக்கு வந்துவிட்டோம்; மக்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம், எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்” என்ற அதிகாரத் தொனியை ஓரம்கட்டிவைத்துவிட்டு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.