ஈரோடு,
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 16-ந்தேதி தனது நண்பருடன் ஈரோடு பஸ் நிலையம் வந்தார். அப்போது, சிறுமியின் நண்பருக்கு தெரிந்த 20 வயது மதிக்கத்தக்க செந்தில்குமார் என்ற வாலிபர் அங்கு வந்துள்ளார். அப்போது சிறுமி, செந்தில்குமாருடன் பேசி உள்ளார். இதையடுத்து சிறுமியின் நண்பர், அவசர வேலையாக செல்வதாக கூறி விட்டு அங்கிருந்து தலைமறைவானார். இதையடுத்து ஈரோடு வ.உ.சி. பூங் காவிற்கு சிறுமியை அழைத்து சென்று செந்தில்குமார் சிறுமிக்கு தாலி கட்டி உள்ளார். பின்னர் இருவரும் ஈரோடு பஸ் நிலையம் வந்து, அங்கிருந்து நாமக்கல் செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி அமர்ந்தனர். பஸ் சிறிது தூரம் சென்றது.
பஸ் பயணிகள் சிறுமியின் கழுத்தில் கிடந்த தாலியை பார்த்து சந்தேகம் அடைந்து செந்தில்குமாரிடமும், சிறுமியிடமும் விசாரித்தனர். அப்போது செந்தில்குமார், பஸ்சில் இருந்து இறங்கி தப்பி தலைமறைவானார். இதைத் தொடர்ந்து பஸ் பயணிகள் இதுகுறித்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சிறுமியின் தாயை வரவழைத்து புகார் பெறப்பட்டு, செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அரசின் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.