ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியை விட்டு, நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த சிறுத்தை, திம்பம் மலைப்பாதையின் தடுப்புச்சுவரில் படுத்திருந்தது. அப்போது அந்த வழியாக காரில் வந்த நபர் இந்த காட்சியை பார்த்து அச்சத்தில் காரை அப்படியே நிறுத்திவிட்டார். மேலும் இந்த காட்சியை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து அந்த சிறுத்தை தடுப்புச்சுவரில் நடந்து சென்றது. சிறிது நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி திம்பம், ஆசனூர், கேர்மாளம் சாலையில் உலா வருகிறது. எனவே வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு இறங்கவோ, அருகில் சென்று வீடியோ எடுக்கவோ கூடாது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.