தமிழக செய்திகள்

ஈரோடு: கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலி - பொதுமக்கள் நிம்மதி

நீண்ட நாட்களாக அட்டகாச செய்த சிறுத்தைப்புலி பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் வனச்சரகத்தில் யானைகள், சிறுத்தைப்புலிகள், மான்கள் உள்பட பல் வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் குண்டேரிப்பள்ளம் பகுதியில் மூர்த்தி என்பவரது தோட்டத்தில் உள்ள கால்நடைகள் மற்றும் சுற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை வேட்டையாடி சிறுத்தைப்புலி ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த டி.என்.பாளையம் வனத்துறையினர் சிறுத்தைப்புலியை பிடிக்க அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி நடமாட்டத்தை கண்காணித்தனர். அப்போது சிறுத்தைப்புலி நடமாட்டம் உறுதியானது. இதையடுத்து மூர்த்தியின் தோட்டத்தில் வனத்துறை சார்பில் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் கூண்டில் சிக்கா மல் சிறுத்தைப்புலி போக்கு காட்டியது..இந்த நிலையில் நேற்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தைப்புலி வசமாக சிக்கிக்கொண்டது.

இதையறிந்த வனத்துறையினர் அங்கு வந்தனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் ஜான் பீட்டர் கூறும்போது, 'கூண்டில் சிக்கியது ஆண் சிறுத்தைப்புலி. இதற்கு 5 அல்லது 6 வயது இருக்கும். பிடிபட்ட சிறுத்தைப் புலிக்கு ஒரு சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மயக்க ஊசி செலுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தைப்புலியின் உடல் நலம் தேறிய பிறகு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும்' என்றார். நீண்ட நாட்களாக அட்டகாச செய்த சிறுத்தைப்புலி பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.