சென்னை,
2000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்பட 6400 பணியிடங்களை நிரப்ப ஊழியர் காப்பீட்டு கழகம் (இஎஸ்ஐசி) நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை மந்திரி பூபேந்திர யாதவ் கூறியுள்ளார்.
சென்னை இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், நாடு முழுவதும் 23 புதிய 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளை அமைக்க உள்ளதாகவும், 60 க்கும் மேற்பட்ட மருந்தகங்களை நிறுவியுள்ளதாகவும் கூறினார்.
புதிய தலைமுறை மருத்துவர்களுக்குள், எதிர்காலத்தை வடிவமைக்கும், நாளைய இந்தியாவை வடிவமைக்கும் சக்தி உள்ளதாகக் கூறிய அவர், வாழ்க்கையில் இன்னும் பெரிய உயரங்களை அடைய அவர் வாழ்த்து தெரிவித்தார்.
ஊழியர் காப்பீட்டு கழகம் நாட்டு மக்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், திறமையான இளம் மருத்துவர்களை ஆண்டுதோறும் ஆதரிப்பதிலும் ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளது.
ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக முற்றிலும் அர்ப்பணிப்புடன் செயல்படும் துடிப்பான நிறுவனமாக இது உள்ளது என்று அவர் கூறினார். இங்கு பட்டம் பெறும் மாணவர்கள், மக்களின் நல்வாழ்வுடன் தொடர்புடைய பணியை மேற்கொள்ளவுள்ளதாகவும், இந்தப் பட்டம் தொழிலை வரையறுப்பது மட்டுமல்லாமல், நமது பெரிய சமுதாயத்திற்கு ஒரு தனித்துவமான மற்றும் மதிப்புமிக்க குணம் கொண்டவராக வரையறுக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
நமது சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை உயர்த்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு மருத்துவர்கள் பங்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். நாட்டின் தொழிலாளர்களுக்கு மருத்துவச் சேவைகளை எளிதாக அணுகுவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த ஆண்டு ஜனவரி முதல் தினசரி சராசரி 2153 வெளிநோயாளிகளுடன், 576329 பயனாளிகளுக்கு இந்தக் கல்லூரி சேவையை வழங்கியுள்ளது என்றும் கூறினார்.
அதிக உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை தொடர்ந்து உருவாக்கி வரும் அரசு, இந்தியாவில் மூன்று நகரங்களில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கேத் லேப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறினார். மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன், மக்கள் மத்தியில் தடுப்பு சுகாதார நடைமுறைகளை ஊக்குவித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் மருத்துவமனைகளுக்குச் சென்ற நிலை மாறி, இப்போது தொழிலாளர்களுக்கு அவர்களின் பணியிடங்களில் இஎஸ்ஐ சென்று சேவை புரிவதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழ், அரசு தொழில் சார்ந்த நோய்களை இலக்காகக் கொண்டு, பீடி மற்றும் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு தொழில் சார்ந்த சுகாதார பரிசோதனைகள் மற்றும் தொடர் கண்காணிப்புகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
பாராமெடிக்கல் வேலைகளுக்கான திறமையான தொழிலாளர்களை நோக்கமாகக் கொண்டு, 10 துறைகளில் சான்றிதழ் படிப்புகளைத் தொடங்கியுள்ளது என்ற தகவலையும் அவர் கூறினார்.