சென்னை,
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்வது ஏழை, எளிய மற்றும் விளிம்புநிலை மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்களைக் கடந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அனைத்து தரப்பு மக்களையும் வஞ்சித்துள்ள நிலையில், மின்கட்டண உயர்வு, சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்வு உள்ளிட்ட தொடர் கட்டண மற்றும் வரி உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவுகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன.
இந்நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக்கூடக் கட்டுப்படுத்த முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகிறது.
மேலும், அடுத்தடுத்த பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில், அத்தியாவசியப் பொருட்களின் விலை, குறிப்பாக சர்க்கரையின் விலை 50% வரையிலும், அரிசியின் விலை 40% வரையிலும், எண்ணெயின் விலை 60% வரையிலும் உயர்ந்திருப்பதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாடச் செலவுகள் அதிகரித்துள்ளதோடு, அவர்களின் பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு, விலை குறையும் வரை நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அளவை தேவைக்கேற்ப உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.