தமிழக செய்திகள்

ஆட்சி, காட்சிகள் மாறினாலும்...தமிழகத்தில் கஞ்சா போதை எள்ளளவு கூட குறையவில்லை - வானதி சீனிவாசன்

போதைப்பொருள் விற்பனை நெட்வொர்க்கை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

சென்னை,

ஆட்சி, காட்சிகள் மாறினாலும்...தமிழகத்தில் கஞ்சா போதை எள்ளளவு கூட குறையவில்லை இது தொடர்பாக தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கொலை வெறி தாக்குதல்

சென்னை எண்ணூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் வீடு புகுந்து தம்பதியரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே அந்த கும்பல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து, பயன்படுத்தி வந்ததை தட்டிக்கேட்டதால் தான் அவர்கள், தம்பதிகள் மேல் கொலை வெறி தாக்குதலை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆமை வேகம்

ஆட்சி, காட்சிகள் மாறினாலும் கஞ்சா போதை பொருட்களின் பயன்பாடு மட்டும் தமிழகத்தில் எள்ளளவு கூட குறையவில்லை என்பதற்கு இது போன்ற சம்பவங்களே சாட்சி. மேலும் தமிழகத்தில் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் ஆமை வேகத்தில் நகர்வது தவெக அரசின் நிர்வாக தோல்விக்கான ஆரம்ப புள்ளி.

தீவிர நடவடிக்கை

எனவே குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, போதைப்பொருள் விற்பனை நெட்வொர்க்கை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT