கோவை,
கோவையை அடுத்த ஆவாரம்பாளையம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் 2 குழந்தைகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரின் 2 குழந்தைகளும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பெண் ஏழ்மையின் காரணமாக கடந்த 3 மாதங்களாக சரியாக வாடகை செலுத்த முடியவில்லை என்று தெரிகிறது.
ஆனால் வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்டு வந்ததாக தெரிகிறது. 3 மாதம் வாடகை பாக்கி செலுத்தாததால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர், அந்த பெண்ணின் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே அள்ளி வீசியதாக கூறப்படுகிறது. மேலும் அட்வான்ஸ் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்ததையும் உரிமையாளர் கைப்பற்றிக் கொண்டு வீட்டில் இருந்து அந்த பெண்ணையும், குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக தெரிகிறது.
இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் அந்த பெண் தனது குழந்தைகளுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் ஆவாரம்பாளையத்தின் மேம்பாலம் கீழ் ரோட்டில் தவித்து வருகிறார். அங்கு ஓரமாக சமையல் பாத்திரங்கள், வீட்டு பொருட்களை அடுக்கி வைத்துள்ளார். பள்ளி செல்ல வேண்டிய குழந்தை கள் சீருடையுடன் அங்கு தவித்து வரும் காட்சி சமூக வலைத் தளத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.