மயிலாடுதுறையில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.
முன்னாள் படைவீரர்கள்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை, கலெக்டர் மகாபாரதி கேட்டறிந்தார். இதில் கலந்து கொண்ட பலர் தங்களது குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர்.
நிதி உதவி
அதனை தொடர்ந்து கல்வி உதவித்தொகை, கண் கண்ணாடி நிதியுதவி, சிறப்பு நிதியுதவி, பல்செட் நிதியுதவி என மொத்தம் 25 முன்னாள் படைவீரர்கள்களுக்கு ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நலன்துறை உதவி இயக்குனர் ஆயிஷாபேகம், மனித உரிமைத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் மற்றும் முன்னால் படைவீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.