தொல்லியல் கழகத்தின் 30-ம் ஆண்டு கருத்தரங்கு மற்றும் ஆவணம் இதழ் வெளியீட்டு விழா 2 நாள் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில் தொல்லியல் சார்ந்த சிறப்பு மலரையும், தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணம் தொடர்பான இதழையும் அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், தொல்லியல் கழக செயலாளர் ராசவேலு, நிறுவன தலைவர் சுப்பராயலு, உள்ளூர் செயலாளர் மணிகண்டன், கவிஞர் தங்கம் மூர்த்தி உள்பட தொல்லியல் ஆய்வாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால தொல்லியல் சார்ந்த பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் நாணயவியல் கண்காட்சியும், பாரம்பரிய நெல் கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதனை பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.