தமிழக செய்திகள்

தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: தொழிலாளர்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் அவசியம் - நயினார் நாகேந்திரன்

உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: தொழிலாளர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதுதொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ராட்சத பாய்லர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், தனியார் உலோக உருக்கு தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்ததில், புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன.

இரங்கல்

உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதோடு, பாதிக்கப்பட்டவர்கள் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய தேவையான ஆதரவு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தவெக அரசை கேட்டு கொள்கிறேன்.

கூடுதல் கவனம்

மேலும், வேதிப்பொருட்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் தங்களது தொழிலாளர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும், இதுபோன்ற எதிர்பாரா விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் தொழிற்சாலைகளில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT