தமிழக செய்திகள்

சட்டம் - ஒழுங்கு குறித்து விவாதிக்காதது வருத்தமளிக்கிறது: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட அரசியல் விளம்பரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக தெரிகிறது.

சென்னை,

சட்டம் - ஒழுங்கு குறித்து விவாதிக்காதது வருத்தமளிக்கிறது என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கூறியுள்ளது.

இது தொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு,சட்டம் ஒழுங்கு மோசமாகி வருவது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. தினந்தோறும் வெளியாகும் குற்றச்சம்பவங்கள் குறித்து மக்கள் அச்சத்துடனும், பாதுகாப்பு குறித்த கேள்விகளுடனும் வாழும் நிலை உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன.

ரீல்ஸ்

இத்தகைய சூழலில், இன்றைய சட்டமன்றக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க வாய்ப்பு வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்காமல், பல ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து ரீல்ஸ் தயாரிப்பதற்காக சட்டமன்றத்தின் பொன்னான நேரத்தை செலவிடுவது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை.

தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் முன்னேற்றுவதற்கான புதிய திட்டங்கள், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, முதலீடு, கல்வி மற்றும் அடிப்படை கட்டமைப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட அரசியல் விளம்பரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக தெரிகிறது.

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு குறித்து எழும் மக்களின் கவலைகளுக்கு அரசு தெளிவான பதிலும், உறுதியான நடவடிக்கையும் எப்போது எடுக்கும் என்ற கேள்வி இன்று பொதுமக்களிடையே பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் விவாதங்களைத் தாண்டி, மக்களின் பாதுகாப்பையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டியது அரசு சட்டமன்றத்தில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT