தூத்துக்குடி,
கடந்த 3.10.2023 அன்று தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 'மகிந்திரா மேக்சி கேப்' வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பெண்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தபோது, அந்த வாகனத்திற்கு 'மேக்மா ஹெச்.டி.ஐ.' பொதுக் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு இருப்பதாகச் சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் காப்பீட்டு நிறுவனம் அளித்த விளக்கத்தில், சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு தங்கள் நிறுவனத்தில் எந்தவொரு பாலிசியும் எடுக்கப்படவில்லை என்றும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்றும் தெரிவித்தது. இது தொடர்பாக மேக்மா ஹெச்.டி.ஐ. நிறுவன மேலாளர் விஜயராகவன் அளித்த புகாரின் பேரில், புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் காப்பீடு சம்பந்தமான சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின:
இணையதளம் வாயிலாக நான்கு சக்கர வாகனத்தின் எண்ணைப் பதிவிட்டு, அது இருசக்கர வாகனம் என பொய்யாக காட்டி குறைந்த கட்டணத்தை செலுத்தி அசல் பாலிசி பெறப்பட்டுள்ளது. பின்னர், அந்த அசல் பாலிசியில் வாகன உரிமையாளர் பெயர், முகவரி, வாகனத்தின் வகை ஆகியவற்றை எடிட் செய்து போலி பாலிசியாக மாற்றியுள்ளனர். 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட போலி காப்பீட்டுப் பத்திரங்களை இந்த கும்பல் வழங்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், என்ஜிஓ 'ஏ' காலனி, தெற்கு கடைசி தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுப்பாராஜ் (வயது 38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே திருநெல்வேலி பொருளாதார குற்றப்பிரிவில் போலி இன்சூரன்ஸ் தொடர்பான வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றுள்ள போலி காப்பீட்டு வழக்குகளிலும் இவருக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.