சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக தம்பியை கட்டையால் தாக்கிய அண்ணன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை திருவல்லிக்கேணி, பி.எம்.தர்கா 3-வது தெருவைச் சேர்ந்த இஸ்மாயில் (வயது 36), மெரினா கடற்கரையில் வளையல் கடை நடத்தி வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் மற்றொரு குடியிருப்பில் இவரது அண்ணன் சையது அலி குடும்பத்துடன் வசித்து வருகிறார். சகோதரர்களிடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.
சையது அலியின் வீட்டுக்கதவை இஸ்மாயில் அடிக்கடி தட்டிவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இஸ்மாயில் வீட்டின் அருகே உள்ள ஆட்டோவில் அமர்ந்திருந்தார். அப்போது சையது அலி 'எதற்காக அடிக்கடி என் வீட்டு கதவை தட்டுகிறாய்?' எனக்கேட்டு அவரை கட்டையால் தாக்கினார்.
இதில் காயமடைந்த இஸ்மாயில், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தன்னை தாக்கிய சையது அலி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அதன்பேரில் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சையது அலியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.