தமிழக செய்திகள்

மனைவியுடன் குடும்ப தகராறு: கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பகுதியில் வசித்து வந்த கட்டிட தொழிலாளிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே மது போதையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த வசந்தகுமார் (வயது 38), கட்டிட தொழிலாளி. தற்போது தாப்பாத்தி முகாமில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், வசந்தகுமார் தனது மனைவி பரமேஸ்வரி மற்றும் குழந்தைகளுடன் கடந்த ஒரு மாதமாக எட்டையபுரம் கோட்டை மேல தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வசந்தகுமாருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், போதையில் மனைவியுடன் அடிக்கடி குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் பரமேஸ்வரி வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்றுவிட்டனர். மதியம் 3 மணியளவில் பரமேஸ்வரி வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் உள்ளே வசந்தகுமார் ஆஸ்பெஸ்டாஸ் கூரை கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது வசந்தகுமார் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எட்டையபுரம் காவல் நிலைய போலீசார், வசந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.