சென்னை,
தமிழகத்தின் சில மாவட்டங்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள், ரூ.5 வரை தன்னிச்சையாக பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவில், ஊட்டி தவிரத்து பிற இடங்களில் 4,600 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-ம் ஆண்டுக்கு பின்னர் தனியார் பேருந்துகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. எரிபொருள் மற்றும் உதிரி பாகங்கள் விலை பல மடங்கு உயர்ந்த நிலையில், தனியார் பேருந்து தொழிலில், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, தனியார் பேருந்து உரிமையாளர்கள், அரசிடம் கடந்த சில ஆண்டுகளாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு தொடர்ந்து, மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில் சில மாவட்டங்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள், தன்னிச்சையாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
வேலூர், கடலுார், சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சில தனியார் பேருந்து நிறுவனங்கள், ரூ.2 முதல் ரூ.5 வரை, டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளன. இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சிலர் கூறும்போது, "கட்டண உயர்வு தொடர்பாக, கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, தமிழக அரசு தாமதம் செய்து வருவது கவலை அளிக்கிறது. வேறு வழியில்லாமல், ஒரு சில பேருந்துகளில் கட்டணம் உயர்த்தியதாக தகவல் வந்தது.
அவர்களை தொடர்பு கொண்டு, 'தமிழக அரசுடன் பேச்சு நடந்து வருகிறது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்' எனக் கூறினோம். அதை ஏற்று அவர்களும் வழக்கமான கட்டணத்தையே வசூலிக்கின்றனர்" என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.