சென்னை,
விவசாய கடனில் குறைந்தபட்சம் ரூ.75 ஆயிரமாவது தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி என்றும், மற்ற விவசாயிகளுக்கு அவர்கள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 50 சதவிதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 75 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி என்றும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் 75 ஆயிரம் ரூபாயாவது தள்ளுபடி என்று அறிவிப்பதுதான் விவசாயிகளுக்கு ஓரளவாவது திருப்தியை கொடுக்கும். எனவே, இதை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.