தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே கடம்பா குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற விவசாயி ஒருவர், எதிர்பாராதவிதமாக தனது மீன் வலையிலேயே சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள கீழக்கல்லாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பட்டானி மகன் இசக்கிமுத்து (வயது 55). விவசாயியான இவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்தினரிடம் கடம்பா குளத்தில் மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். ஆனால் இரவாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மறுநாள் (நேற்று) கடம்பா குளத்திற்குச் சென்று தீவிரமாகத் தேடினர்.
அப்போது குளத்து நீரில் வீசப்பட்ட மீன்வலையில் இசக்கிமுத்து சிக்கிய நிலையில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து உடனடியாக குரும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இசக்கிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.