கபிஸ்தலம்:
சுவாமிமலை அருகே நாகக்குடி ஊராட்சியில் உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி நடந்தது. இதில் 25 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு குழுவிற்கு 5 விவசாயிகள் வீதம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் நன்மை செய்யும் பூச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ளும் விதமாக சிலந்தி, பொறிவண்டு, தரை வண்டு, ஊசித் தட்டான், குளவி ஆகிய பெயர்கள் வழங்கப்பட்டன.ஒவ்வொரு குழுவும் வயல் பகுதிக்கு சென்று நன்மை, தீமை செய்யும் பூச்சிகளை இனம் கண்டு அவைகளின் இருப்பிடம், உணவு, இனப்பெருக்கம் ஆகியவை குறித்து அறிந்து கொண்டனர்.இதில் கும்பகோணம் வட்டார வேளாண்மை அலுவலர் அசோக்ராஜ், கும்பகோணம் வட்டார துணை வேளாண் அலுவலர் சாரதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பகுதி உதவி வேளாண்மை அலுவலர் துர்கா தேவி செய்திருந்தார்.வயல்வெளி பயிற்சியில் பார்வையிட்ட வகையில் வயல்களில் பாசி அதிக அளவு காணப்பட்டதால் இதனை கட்டுப்படுத்த காப்பர் சல்பேட் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 20 கிலோ மணலில் கலந்து வயலில் இட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.