டிடிவி தினகரன் 
தமிழக செய்திகள்

தவெக அரசின் 100 நாள் ஆட்சி …வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி - டிடிவி தினகரன்

போதைப்பொருள் விற்பனை தொடங்கி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வரை ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பு என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னை,

தவெக அரசின் 100 நாள் ஆட்சி …வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சத்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஏமாற்றம்

தமிழ்நாட்டில் அரசு ஆட்சியமைத்து இன்றோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. முதல் 100 நாட்களில் வாக்களித்த மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டியதற்கு பதிலாக, ஏமாற்றத்தையும் அதிருப்தியையுமே இந்த அரசு விதைத்துள்ளது.

ரீல்ஸ்

அரசு நிர்வாகத்தை முதல் 100 நாளை கொண்டு முழுமையாக மதிப்பிட முடியாது என்றாலும், அந்த அரசு செல்லும் திசையை குறிப்பிட்ட நாட்களில் நிச்சயமாக கண்டறிய முடியும். இந்த 100 நாட்களில் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அரசு நிர்வாகம், தனக்கும் மக்கள் நலனுக்கும் எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாதது போல சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் போடுவதையே பிரதான வேலையாக செய்து வந்துள்ளது.

வேடிக்கையான அறிவிப்பு

அந்த வகையில் கடந்த 100 நாட்களில்... கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு; புதிதாக காவலர்களை நியமிக்காமல், இருக்கும் காவலர்களை வைத்தே புதிய அதிரடிப்படை என்ற வேடிக்கையான அறிவிப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது.

போதைப்பொருள் கலாச்சாரம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அமைச்சர் மற்றும் ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு எழுந்த பின்னும் எந்தவித விசாரணையும் இல்லை. பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி பட்டிதொட்டி எங்கும் பரவியிருக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்; இது குறித்து தகவல் தரும் மாணவர்கள் படுகொலை. போதைப்பொருள் விற்பனை தொடங்கி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வரை ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்குத் தொடர்பு.

அது போதைப்பொருளோ?

தற்போதைய அமைச்சர் ஒருவர், தேர்தலுக்கு முன்பாக உடல்நலம் சரியில்லாத தனது குழந்தையை கிரிக்கெட் போட்டிக்கு அழைத்து சென்று, வெள்ளை நிற பவுடரை தனது ஏடிஎம் கார்டு மூலம் உடைத்ததை அவரே 'தக்' தருணம்' என ரீலாக வெளியிட, "அது போதைப்பொருளோ?" என பலர் சந்தேகம் எழுப்பியும் இதுவரை எந்த விசாரணையும், நடவடிக்கையும் இல்லை.

மெத்தனப்போக்கு

விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு அரைகுறையாக அறிவிக்கப்பட்ட தள்ளுபடி; இன்றுவரை விவசாயிகள் போராடியும் எந்தப் பயனும் இல்லை. காவிரி நதிநீர், மேகதாது அணை மற்றும் குறுவை சாகுபடி விவகாரங்களில் தொடரும் அரசு நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு.

ஏமாற்று அறிவிப்பு

மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதிக்கு மாறாக, 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவசம் என ஏமாற்று அறிவிப்பு. முதல்-அமைச்சர் தொகுதியில் தொடங்கி, அனைத்து பகுதிகளிலும் அறிவிக்கப்படாத இரவுநேர மின்வெட்டு. தமிழகம் எங்கும் திடீரென உயர்த்தப்பட்ட மின்கட்டணம்; மக்கள் போராட்டத்திற்கு பின் "மின்கணக்கீட்டில் குளறுபடி" என்று திசைதிருப்பினர்.

உயர்த்தப்பட்ட சொத்துவரி

அதுவும் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. சென்னை மாநகராட்சியில், மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசிக்காமல் எதேச்சதிகாரத்தோடு உயர்த்தப்பட்ட சொத்துவரி, மக்களின் தொடர் கேள்விகளுக்குப் பின் கைவிடப்பட்டது.

கலிங்குராய மன்னர்

அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம் என அரசு நிர்வாகத்திற்குள் ஆளுங்கட்சியினரின் தலையீடு. உதவியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அரசு உயர் பதவிகளை வழங்கி, தன்னை நவீன கலிங்குராய மன்னர் என நிரூபித்துள்ளார் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்.

ஸ்டிக்கர் ஒட்டுதல்

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சொந்த கட்சியினரிடமே லஞ்சம் கேட்பதாக தவெக நிர்வாகிகள் புகார். கடந்த திராவிட ஆட்சிகளில் அறிமுகப்படுத்தி செயல்படுத்திய திட்டங்களுக்கு "வெற்றி" என வீணாக பெயர் சூட்டி ஸ்டிக்கர் ஒட்டுதல். சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி அமைச்சர்கள் மற்றும் முதல்-அமைச்சரின் அறைகள் வரை அதிகரித்திருக்கும் ரீல்ஸ் மோகம்.

அவல நிலை

அரசு மருத்துவமனை அவசரச் சிகிச்சை பிரிவுகளுக்குள்ளாகவே எலிகள் சுற்றித்திரியும் அவல நிலை. அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் குழந்தைகள் முதல், தூய்மை பணியாளர்கள் வரை வழங்கப்படும் உணவின் தரம் கேள்விக்குறி. பழனி முருகன் திருக்கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் தனிநபர் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது; அதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கும் சொந்தமான நிலம் மோசடியாக பத்திரப்பதிவு என தினந்தோறும் வரும் நில மோசடி புகார்கள்.

நிதிநிலை அறிக்கை

மக்களுக்கும் மாநிலத்திற்கும் எந்த வகையிலும் துளியளவும் பயன்படாத நிதிநிலை அறிக்கை; விவசாயிகளின் வலியை உணராமல் தயாரிக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை. கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் தலைமை செயலகத்தில் பல கோடி ரூபாய் செலவில் தனது அறையை மாற்றும் முதலமைச்சர்.

அக்கறையின்மை

உண்மையான முதலீடுகளை கொண்டுவருவதிலும் வேலைவாய்ப்பைப் பெருக்குவதிலும் அக்கறையின்மை. தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடாத நிலையில், இந்தத் தமிழக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை மடைமாற்ற அவசியமற்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றம்.

ரீல்ஸ் மற்றும் விளம்பர மோகம்

இப்படியாக தமிழக அரசின் இந்த 100 நாட்களில் நடைபெற்ற குழப்பங்களையும் குளறுபடிகளையும் அடுக்கும் நிலையில், ஏதேனும் மக்கள் நலனுக்கென ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதா என்றால் இதுவரை தெரியவில்லை. நிர்வாகக் குழப்பம், திட்டமிடலின்மை, ரீல்ஸ் மற்றும் விளம்பர மோகம் மட்டுமே இந்த 100 நாட்கள் தவெக ஆட்சியின் அடையாளங்களாக மாறியுள்ளன.

ஒட்டுமொத்த தோல்வி

முதல் 100 நாட்கள் ஆட்சியில் ஒட்டுமொத்த தோல்வியை சந்தித்திருந்தாலும், இனியாவது மக்கள் பயனடைவதற்கான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க முன்வர வேண்டும் என இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.