தமிழக செய்திகள்

தூத்துக்குடி வருகை தரும் துணை முதல்-அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட விவசாயிகள் முடிவு

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் அத்துமீறிப் புகுந்து, வளர்ந்து நின்ற பயிர்களை அழித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா, முடுக்கலங்குளம் கிராமத்தில் விவசாயிகள் காலங்காலமாகப் பயிர் செய்து வரும் நிலங்களில், 'ஸ்பீடு பூமி' என்ற தனியார் நிறுவனம் அத்துமீறிப் புகுந்து, வளர்ந்து நின்ற பயிர்களை அழித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயிகளின் உழைப்பும், முதலீடும் கண் முன்னே அழிக்கப்பட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பலமுறை முறையிட்டும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு அதிகாரிகள் அந்தத் தனியார் நிறுவனத்திற்குத் துணை போவதாகவும், தங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இழந்த விவசாயிகள், தங்களது நியாயமான கோரிக்கையைத் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல, தூத்துக்குடிக்கு வருகை தரும் துணை முதல்-அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டத் தயாராகி வருகின்றனர்.

"ஏழை விவசாயிகளின் கண்ணீருக்கு மதிப்பு தராத இந்த அரசுக்கும், அதிகாரிகளுக்கும் எங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யவே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். உரிய நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது" என்று தமிழ் விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.