திருப்பூர்,
மலைவேம்பு சாகுபடி
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த நீர் ஆதாரத்தில் அதிக லாபம் தரும் பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக குறுகிய மற்றும் நீண்ட நாள் பயிர்களை சாகு படி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், என்.ஜி. புதூர் பகுதியில், மலைவேம்பு சாகுபடியில் விவசாயிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு, வறட்சியை தாங்கி வளரக்கூடிய மலைவேம்பு மரங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. செம்மண் மற்றும் வண்டல் மண் சார்ந்த நிலங்களில் சொட்டு நீர் பாசன முறை மூலம் இவை மிக வேகமாக வளர்கின்றன. நட்ட 5 முதல் 6 ஆண்டுகளுக்குள் மரங்களை வெட்டுவதற்கு தகுந்ததாக இருக்கும்.
விவசாயிகள் படையெடுப்பு
குறிப்பாக, இவை 'பிளைவுட்' தயாரிப்பு, தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் காதிக ஆலைகளில் அதிகளவில் தேவைப்படுகிறது. மலைவேம்பு சாகுபடியில் மரங்கள் நேராக உயரத்திற்கு வளர, தொடக்க காலத்தில் பக்க கிளைகளை சரியான முறையில் கவாத்து (வெட்டி விடுதல்) செய்வது மிக முக்கியமாகும். மரம் 30 முதல் 40 அங்குல தடிமன் அடையும் போதுதான் பிளைவுட் ஆலைகளுக்கு நல்ல விலைக்கு செல்லும்.
அந்த நேரத்தில், பிளைவுட் ஆலை அதிபர்கள் மற்றும் வியாபாரிகள், தோட்டங்களுக்கே நேரில் சென்று மரத்தின் தடிமனை அளந்து மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். அறுவடையின் போது வியாபாரிகளே மரங்களை வெட்டி எடுத்து செல்வதால், வெட்டுக்கூலி மற்றும் போக்குவரத்து செலவு விவசாயிகளுக்கு மிச்சமாகிறது. மேலும், குறைந்த பராமரிப்பு மற்றும் இயற்கை பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட பயிர் என்பதால் மலைவேம்பு சாகுபடியை நோக்கி விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர்.
நல்ல லாபம்...
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மலைவேம்பு பயிரிட்ட முதல் 2 ஆண்டுகள் வரை நிலக்கடலை, உளுந்து, பாசிப்ப யறு போன்ற பயிர்களை ஊடு பயிராக சாகுபடி செய்து தொடர் வருமானம் பெறலாம். 10-க்கு 10 அடி இடைவெளியில் ஏக்கருக்கு சுமார் 400 மரங்கள் வரை நடவு செய்யலாம். 5 முதல் 6 ஆண்டுகளில் ஒரு மரம் 300 முதல் 500 கிலோ வரை எடை வந்து, ஏக்கருக்கு சராசரியாக 100 முதல் 120 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது சந்தையில், ஒரு டன் மலைவேம்பு ரூ.5,500 முதல் ரூ.6,500 வரை விற்பனையாகிறது. இதனால் ஏக்கருக்கு ரூ.6 லட்சம் வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது என்றனர்.