தமிழக செய்திகள்

ராசிமணலில் புதிய அணை கோரி விவசாயிகள் 20ம் தேதி நடைபயணம்..!

மேலும், வரும் 23-ம் தேதி சென்னை எழும்பூரில் பிரசாரக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

காவிரியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் மாநிலம் தழுவிய நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கான காவிரி நீரோட்டம் பாதிக்கப்படும் என கூறி, தமிழகத்தில் அத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ராசிமணலில் அணை கட்ட வேண்டும்

மேகதாது அணைக்கு மாற்றாக, தமிழகப் பகுதியில் உள்ள ராசிமணலில் புதிய அணை கட்ட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் மாநிலம் தழுவிய நடைபயணம் நடத்தப்பட உள்ளது.

20-ம் தேதி நடைபயணம் தொடக்கம்

இதுகுறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:-

தமிழகப் பகுதியான ராசிமணலில் அணை கட்ட வேண்டும். இந்த கோரிக்கையில் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி மாநிலம் தழுவிய நடைபயணம் தொடங்க உள்ளது. காவிரி கடலில் கலக்கும் பூம்புகாரில் இருந்து நடைபயணம் தொடங்கி, டெல்டா மாவட்டங்கள் வழியாக சென்று திருவாரூரில் நிறைவு செய்யப்பட உள்ளது.

23-ம் தேதி சென்னையில் பிரசாரக்குழு கூட்டம்

மேலும், வரும் 23-ம் தேதி சென்னை எழும்பூரில் பிரசாரக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராசிமணல் அணை கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில், த.வெ.க. பொதுச்செயலர் ஆனந்த், அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியுள்ளோம்.

இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.

SCROLL FOR NEXT