தமிழக செய்திகள்

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தீக்குளித்து தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் ஒரே மகன் கடந்த மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 82). இவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இவர்களது ஒரே மகனான சண்முகவேல் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரே மகனை இழந்த துக்கத்தில் சுப்பிரமணியன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

தன்னை கவனித்துக்கொள்ள யாரும் இல்லையே என்ற விரக்தியில் இருந்த சுப்பிரமணியன், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.