தமிழக செய்திகள்

"பூசாரிகள் முகங்களில் அச்ச உணர்வு"- கவர்னரின் குற்றச்சாட்டுக்கு அர்ச்சகர்கள் மறுப்பு

பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களின் முகங்களில் பயம், அச்ச உணர்வு இருந்ததாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார்.

சென்னை,

சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள அருள்மிகு கோதண்டராமர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில், "பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும்போது, அக்கோவில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது." என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், கவர்னரின் குற்றச்சாட்டுக்கு அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக கோவில் அர்ச்சகர் ஒருவர் அளித்த பேட்டியில், "எந்த அடக்குமுறையும் இல்லை. இன்று சிறப்பு பூஜை நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடு செய்ய இரவு நாங்கள் தூங்கவில்லை. அதனால் முகம் சோர்வாக காணப்பட்டிருக்கலாம். ஓய்வு இல்லாததால், எங்களது முகங்களில் வாட்டம் தெரிந்திருக்கலாம்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT