சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry - FICCI) பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்து பேசினார்கள்.
இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் நீண்டகால பொருளாதார நோக்கத்திற்கிணங்க, மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் முதலீட்டை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் வழங்கி வரும் முக்கிய பங்களிப்பைப் பாராட்டினார். மேலும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைக் கவனமாகக் கேட்டறிந்து, அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், நாட்டின் முன்னணி பொருளாதார சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்தப் பயணத்தில், பிரதிநிதிகள் குழுவின் வழிகாட்டுதலும், பரிந்துரைகளும் தொடர்ந்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் சேர்மன் ஜி.எஸ்.கே. வேலு, இணைத் தலைவர்கள் பூபேஷ் நாகராஜன், டாக்டர் அசோக் வர்கீஸ், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கத்தின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் ஆர். சுதர்சன், ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வெளிவிவகாரங்கள் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.