திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை மருத்துவர்களான இரு சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இதில் அவரது மனைவிகளும் மருத்துவர்களாக பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சகோதரர்கள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மருத்துவமனையை யார் நிர்வகிப்பது என்ற பிரச்சினை எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை பெண் மருத்துவரான அழகானந்தா என்பவர் திடீரென மருத்துவமனையின் 3-வது மாடிக்கு சென்று அங்கு பணியில் உள்ள செவிலியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பொது வார்டுகளின் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த 5க்கும் மேற்பட்ட நோயாளிகள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்துள்ளார். இதனால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையிலிந்து அலறியடித்து வெளியே ஓடினர். இதனால் அங்கு பணிபுரிந்த செவிலியர்களும் துப்பட்டாவால் மூக்கை பொத்திக் கொண்டு வெளியே ஓடினர் .
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெண் மருத்துவரான அழகானந்தா போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து மற்றொரு மருத்துவர் மோகனசுந்தரி என்பவர் போலீசாரிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.