தமிழக செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 கட்டண ரசீது வழங்கியதில் மோசடி - பெண் ஊழியர் சஸ்பெண்ட்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. தினமும் இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலில் இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண சிறப்பு தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் என 3 வழிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ரூ.100 கட்டண தரிசனத்தில் போலியாக ரசீது கொடுத்து பெண் ஊழியர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு பல லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. காட்டுத்தீ போன்று பரவிய இந்த தகவல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் கவனத்துக்கு வந்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் மேனகா என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், அவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. முதற்கட்ட நடவடிக்கையாக பெண் ஊழியர் மேனகாவை சஸ்பெண்ட் செய்து கோவில் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.