மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ரகோத்தமன் மனைவி வத்சலா (வயது 58). ரங்கராஜ் மகள் அட்சயா (28). பி.இ. பட்டதாரி. உறவினர்களான இவர்கள் இருவரும் கடந்த 18-ந் தேதி மயிலாடுதுறைக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஒரு மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். மயிலாடுதுறை பழைய சுங்கச்சாவடி எதிரே அவர்கள் வந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில், பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கிய வத்சலா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அட்சயா சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அட்சயா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.