தமிழக செய்திகள்

சேலத்தில் ஐ.டி. பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

சேலத்தில் தவணை தொகை கட்ட முடியாத மனவேதனையில் ஐ.டி. பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேலம்,

சேலம் தாதகாப்பட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் மணி. இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் அகல்யா (27). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அகல்யா கடந்த 8-ந் தேதி விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான சேலத்திற்கு வந்திருந்தார். சமீபத்தில் அவர் ரூ.1½ லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போனை தவணை முறையில் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அதற்கான மாத தவணை தொகையை தொடர்ந்து கட்டி வந்த நிலையில், இந்த மாத தவணையை செலுத்த முடியாமல் அவர் மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.

இதனால் விரக்தியடைந்த அகல்யா, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்த குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அன்னதானப்பட்டி போலீசார், அகல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அகல்யாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.