தமிழக செய்திகள்

ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஜல்லிக்கற்களை லாரியில் கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்க அப்போதைய செங்கோட்டை வட்டாட்சியர் ஒருவர் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செண்பகராஜ். இவர் கடந்த 2013-ம் ஆண்டு புளியரை 'எஸ்' வளைவு அருகில் 'ஹாலோ பிளாக்' கற்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் உற்பத்திப் பணிகளுக்காக லாரியில் ஜல்லிக்கற்களை எடுத்துச் செல்ல அனுமதி கோரி, அப்போதைய செங்கோட்டை வட்டாட்சியராக பணிபுரிந்த ஸ்டெல்லா எஸ்தர் ராணியிடம் செண்பகராஜ் முறைப்படி மனு அளித்திருந்தார். ஆனால், ஜல்லிக்கற்களை லாரியில் கொண்டு செல்வதற்கான அனுமதி ஆவணங்களை வழங்க வட்டாட்சியர் ஸ்டெல்லா எஸ்தர் ராணி, செண்பகராஜிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சமாக தருமாறு கேட்டுள்ளார்.

அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத செண்பகராஜ், இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் நிலையத்தில் ரகசியமாக புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 26.11.2013 அன்று ரசாயன பவுடர் தடவிய ரூ.7 ஆயிரம் பணத்தை செண்பகராஜிடம் கொடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பினர்.

பெண் வட்டாட்சியருக்கு சிறை தண்டனை:

செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து அந்த லஞ்சப் பணத்தை ஸ்டெல்லா எஸ்தர் ராணி வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும், களவுமாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான ஊழல் தடுப்பு வழக்கு தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆதாரங்களுடன் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ராஜவேல் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பெண் வட்டாட்சியர் ஸ்டெல்லா எஸ்தர் ராணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராத தொகையை கட்டத் தவறினால் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஜென்சி ஆஜராகி வாதாடினார்.