தமிழக செய்திகள்

நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதா? உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

மாணவன் மறைந்து 12 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக போராட்டத்தை ஒடுக்குவதிலும் - வழக்குப் பதிவு செய்வதிலும் தான் காவல்துறை குறியாக இருக்கிறது என்று சாடியுள்ளார்.

சென்னை,

எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய அவருடைய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.பெற்ற பிள்ளையை இழந்து நீதி கேட்டு போராடினால், வழக்கு போடுவதும், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரது உறவினரை விசாரணைக்கு வர சொல்லி சம்மன் அனுப்புவதும் எந்த வகையிலும் ஏற்க முடியாதது.

மரணத்தில் நடந்தது என்ன?

மாணவன் மறைந்து 12 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக போராட்டத்தை ஒடுக்குவதிலும் - வழக்குப் பதிவு செய்வதிலும் தான் காவல்துறை குறியாக இருக்கிறது.இந்த பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு, மாணவன் மரணத்தில் நடந்தது என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அதற்கு காரணம் யார்? என்பதை எல்லாம் எந்த குறுக்கீடும் இல்லாமல் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.

நீதி கிடைக்க

குறிப்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மரணமடைந்த மாணவனின் குடும்பத்தார் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற்று, அவர்களுக்கான நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT