தமிழக செய்திகள்

தமிழகத்தில் 9-ம் தேதி தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீயணைப்பு பயிற்சி

பயிற்சி பெறாத பாதுகாவலர்களை கண்டறிந்து தொடர்ந்து இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிகவளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்ளில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு அடிப்படை தீயணைப்பு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 384 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களிலும், வருகின்ற 9-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த அடிப்படை பயிற்சி நடைபெற உள்ளது. மேலும் பயிற்சி பெறாத பாதுகாவலர்களை கண்டறிந்து தொடர்ந்து இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த 5 ஆயிரத்து 732 பாதுகாவலர்கள் பங்கேற்கும் இந்த பயிற்சியில், பணிபுரியும் இடத்தில் தீவிபத்து ஏற்பட்டால் தத்தமது நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள தீபாதுகாப்பு உபகரணங்களை கொண்டு எவ்வாறு தீயை அணைப்பது மற்றும் தத்தமது நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களையும், பொதுமக்களையும் எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது பற்றிய அடிப்படை பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது, இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் தனியார் பாதுகாவலர்களுக்கு பயிற்சியில் பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படுகின்றது.