தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மீனவர் உயிரிழப்பு

தாளமுத்துநகர், ராஜபாளையத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர், கடலுக்குச் சென்றுவிட்டு இரவு கரை திரும்பிய பின்னர் கடற்கரையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டார்.

தூத்துக்குடி தாளமுத்துநகர், ராஜபாளையத்தைச் சேர்ந்த அந்தோணிபிச்சை மகன் அந்தோணிசேவியர் (வயது50). மீனவரான இவர், கடந்த 26ம் தேதி கடலுக்குச் சென்றுவிட்டு இரவு கரை திரும்பினார். பின்னர் கடற்கரையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டார்.

ராஜபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்தோணி சேவியர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.