கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

விமான சாகச நிகழ்ச்சி: அண்ணா சதுக்கத்திற்கு கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கம்

அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, இன்று சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காண பொதுமக்கள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்வுகளை காண வரும் பொதுமக்களின் நலன் கருதி, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 8 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகளும், அரசினர் பூங்கா மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் (Small Bus) இயக்கப்பட உள்ளன.

அரசினர் பூங்கா மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து, சென்னை பல்கலைக்கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகளும், அதேபோல், டி.எம்.எஸ் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வி.எம்.தெரு வரை 2 நிமிட இடைவெளியில் மொத்தம் 25 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த பேருந்து வசதியினை பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT