தமிழக செய்திகள்

ஓடுபாதை பராமரிப்பு பணி காரணமாக அந்தமானுக்கு 4 நாட்கள் விமான சேவை ரத்து

அந்தமானில் ஓடுபாதை பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இருந்து 4 நாட்கள் விமான சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு தினமும் 5 முதல் 7 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. அந்தமான் சுற்றுலா தலமாக இருப்பதால் பயணிகள் பெருமளவில் அந்தமானுக்கு சென்று வருகின்றனர்.

அந்தமானில் தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவாகள் வசிப்பதால் அந்தமான் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும்.

ஆனால் அந்தமானில் பகல் 3 மணியில் இருந்து தரைக்காற்று வீச தொடங்கி விடும் என்பதால் விமானங்கள் தரை இறங்கவோ, புறப்படவோ முடியாது. இதனால் அந்தமான் விமான நிலையத்தில் அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் நடக்கும். மாலை மற்றும் இரவு நேரங்களில் விமான சேவைகள் கிடையாது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதியில் இருந்து 4-ந் தேதி வரை அந்தமானில் நிலவிய மோசமான வானிலை மற்றும் அந்தமான் விமான நிலையத்தில் நடந்த பராமரிப்பு பணிகள் காரணமாக அந்தமான் விமான போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

தற்போது 2-வது முறையாக அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதை சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 15-ந்தேதி முதல் நாளை(18-ந் தேதி) வரை 4 நாட்கள் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் சென்று வரும் விமான நிறுவனங்களும், தங்களுடைய விமான சேவைகளை வருகிற 18-ந் தேதி வரையில் ரத்து செய்து உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் 19-ந் தேதியில் இருந்து அந்தமானுக்கு சென்னையில் இருந்து விமான சேவைகள் தொடங்கும் என தெரிவித்து உள்ளன.

அந்தமானுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு தகவல் தரப்பட்டு டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றுதல் அல்லது முழு பணமும் திரும்ப கொடுத்தல் போன்ற முறைகளை விமான நிறுவனங்கள் செய்து கொண்டதாகவும், இதனால் பயணிகளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்