தமிழக செய்திகள்

“சேலை கொடுத்தால் போதுமா?” சி.வி.சண்முகத்தை தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசனும் சர்ச்சை பேச்சு

பெண்களை அவமதிக்கும் வகையில் சி.வி.சண்முகம் பேசியதை தொடந்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு விவாதபொருளாகி உள்ளது.

திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பிரபல நடிகை குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருந்தார்.

தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், திமுக, எம்.பி.கனிமொழி, மாதர் சங்கம், அரசியல் கட்சிகள் என சமூக வலைதளங்களிலும் நடிகர் சங்கம் உள்ளிட்ட அவையும் கண்டனம் தெரிவித்த நிலையில் தனது பேச்சுக்கு உடனடியாக வருத்தம் தெரிவித்திருந்தார் சி.வி சண்முகம். இதற்கிடையே அடுத்ததாக ஒரே நாளில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன்.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் தே.ஜ. கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்து. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பாஜக மாநில செயலாளர் ராம சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

மோசமான, கேவலமான ஒரு ஆட்சி இன்னும் 30 முதல் 45 நாட்கள் இருக்கும் ஓட்டு எண்ணிக்கை முடிந்த அடுத்த நாள் தமிழகத்தின் என்.டி.ஏ கூட்டணியில் தலைமை பொறுப்பேற்று இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சர் பொறுப்பு ஏற்கின்ற பொழுது அத்தனை பீடையும் அத்தனை சனியனும் தொலைந்து போய்விடும். தூத்துக்குடி சகோதரிக்கு நடந்த கொடுமையை கேட்பதற்காக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் தங்கை கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் சென்றபோது வெளியே செல்லுங்கள் என்று கூறி முதல்-அமைச்சரின் தங்கையை வெளியேற்றுகின்றனர்.

இந்த ஆட்சி கேவலமானது என்பதற்கு தூத்துக்குடியில் இருந்து கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவனை வெளியேற்றியதே சாட்சி. உலக நாடுகள் அடித்துக் கொள்கிறார்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இன்று புத்திசாலித்தனமாக ஜனநாயக முறைப்படி அறிவோடு அத்தனை வெளிநாடுகளிடம் பேசி எல்.பி.ஜி சிலிண்டர்களை அமைதியாக கொண்டு வந்து சேர்த்த உத்தமர் நரேந்திர மோடி ஜி. நரேந்திர மோடி அவர்களின் சாணக்கியத்தனத்தினால் பெட்ரோல் டீசல் கேஸ் எதுவும் பிரச்சினை இன்றி கிடைத்து வருகிறது.

நான்கு வருடம் 11 மாதம் எந்தவித ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி ஆண்டு வந்தார். ஜெயலலிதா அவர்கள் மற்றும் கருணாநிதி அவர்கள் இருக்கும்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக கூட திமுகவால் வர முடியவில்லை. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். எம்ஜிஆர் ஆட்சி ஜெயலலிதா ஆசியுடன் பாமக கூட்டணியுடன் 75 எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சியாக இருந்த வருகிறோம்.

தற்போது திமுக நூறு ரூபாய் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ் கொடுத்துள்ளது. மேலும் சேலை கொடுத்துள்ளனர். பாவாடை இல்லாமல் எப்படி சேலை கட்டுவது என பெண்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்." என்றார். அவரது இந்த பேச்சு கடும் கண்டனங்களை பெற்று வரும் நிலையில், அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.