சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை தலைமைச் செயலகத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் டி.சிவா, தேனப்பன், சுரேஷ் காமாட்சி, ஜி.தனஞ்செயன் உள்ளிட்ட பலர் சந்தித்து, கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புக்கான அரசின் உத்தரவால் தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் திரைப்பட படப்பிடிப்புகளை துவங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டுவது தொடர்பான மனுவினை அளித்தனர். இக்கோரிக்கையினை முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆவன செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அமைச்சரிடம் ஊரடங்கில் தவிக்கும் மக்களுக்காக, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 20 சங்கங்களின் மூலமாக ரூ.10 லட்சம் மற்றும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வழங்கிய நிதி ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.10 லட்சத்து 25 ஆயிரத்துக்கான காசோலையை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.
மேலும், அமைச்சரிடம் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புக்கான அரசின் உத்தரவால் தமிழ்நாட்டில் மூடப்பட்டிருக்கும் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டி மனுவினை திரையரங்க உரிமையாளர்கள் அளித்தனர்.
முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆவன செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.