தமிழக செய்திகள்

இசை கலைஞர்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் விருது வழங்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்

இசை கலைஞர்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இசை கலைஞர்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 6 தேசிய விருதுகள் பெற்று, 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தனது இசையால் இவ்வுலகில் சிரஞ்சீவியாக வாழ்கிறார்.

அவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்து அங்கீகரிக்கும் வகையில், அவர் வாழ்ந்து மறைந்த அவருடைய இல்லம் அமைந்துள்ள மகாலிங்கபுரம், காம்தார் நகர் முதல் தெருவுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரை சூட்டி தமிழக அரசு கவுரவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், சாதனையாளர்கள் பெயரில் தமிழக அரசு வழங்கி வரும் அவ்வையார் விருது, டாக்டர் அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது போன்று சரித்திரத்தில் தனது பெயர் பதித்த இசை ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரால் இசை கலைஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT