சென்னை,
சென்னை ஆர்.கே.நகர், மணலி சாலையில் உள்ள எழில்நகரைச் சேர்ந்தவர் வேதக்கண்(வயது 74). இவர், தனது வீட்டில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஆர்.கே.நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து வேதக்கண் ஜாமீன் கோரி சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
பொய் வழக்கு
250 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட எழில்நகர் பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பாக அரசால் 4 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. இங்கு குடியிருப்போர் சங்கத்தலைவராக உள்ளேன். உள்ளூர் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆட்கள், இந்த நிலத்தை அபகரிக்க முயற்சித்தனர். இதை தடுத்ததால் அவர்களது தூண்டுதலின் பேரில், கஞ்சா வைத்திருந்ததாக என் மீது பொய் வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
நேர்மையான அதிகாரி
இந்த வழக்கு நீதிபதி கே.அய்யப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.ராஜன் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தன்மை அறிந்து, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன். அதேநேரம், மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தீவிரமானதாக உள்ளது. எனவே, ஒரு நேர்மையான அதிகாரியை நியமித்து, வழக்கு உண்மையானதா? இல்லையா? என்பது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதற்கிடையே, வேதக்கண் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், மனுதாரர் வேதக்கண்ணுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.