சென்னை,
வரலாற்றில் முதன்முறையாக தமிழக சட்டசபை 10 மணிநேரம் தொடர்ந்து நடந்தது. இரவு 7 மணியையும் தாண்டியது.
தமிழக சட்டசபை நிகழ்வுகள் கடந்த காலங்களில் பொதுவாக காலையில் தொடங்கி அதிகபட்சமாக பிற்பகல் 3 அல்லது 4 மணி வரை நீடிப்பது உண்டு. இதையே நீண்ட நேரம் நடை பெற்றதாக எம்.எல்.ஏ.க்கள் கூறுவதுண்டு. ஆனால் தற்போது த.வெ.க. ஆட்சியில், சட்டசபையில் கேள்வி நேரம் இல்லாத சூழ்நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கடந்த சில தினங்களாக புதிய முயற்சியை மேற்கொண்டார்.
அதன்படி, அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளின் போது, வெட்டுத் தீர்மானத்தில் பெயர் கொடுத்திருந்த எம்.எல்.ஏ.க்கள் விவாதித்த பிறகு வேறு எம்.எல்.ஏ.க்களையும் அவர்களின் கோரிக்கைகளை கூற அழைப்பு விடுத்தார். அந்த வகையில் தினமும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அவையில் பேசி, அவர்களது தொகுதியின் மிக முக்கியமான கோரிக்கைகளை கூற வாய்ப்பு கிடைத்தது. அதில் சில கோரிக்கைகளுக்கு பதிலும் கிடைத்தது.
நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், காலையில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை, அரசு அதிகாரிகளிடம் இருந்து பெற்று, அவற்றை மாலை நேரத் தில் அறிவிப்புகளாக வெளியிட்டார். இதை சபாநாயகர் வெகுவாக பாராட்டினார். இதுதான் ஒரு அமைச்சரின் பொறுப்புக்கான உதாரணம் என்று குறிப்பிட்டார்.
எம்.எல்.ஏ.க்கள் பலரையும் கேள்விகள் கேட்க அனுமதிப்பதை அடுத்து அவை நடைபெறும் நேரம் கடந்த சில நாட்களாக மாலை 6 மணியை தாண்டிச் சென்றது. அதன் உச்சமாக நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய அவை இரவு 7.13 மணிவரை நீடித்தது. அந்த வகையில் சுமார் 10 மணி நேரம் அவை அலுவல்கள் நேற்று நடைபெற்றன. இதுதான் தமிழக சட்டசபை வரலாற்றில் இடைவெளி விடாமல் தொடர்ந்து அவை அதிகபட்சமாக நடைபெற்ற நேரமாக கருதப்படுகிறது.