சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல்
மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்துக்கு மத்திய மீன்வளம், கால்நடை
பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி கிரிராஜ் சிங் அடிக்கல்
நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர்
டி.ஜெயக்குமார், மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை
செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
செயலாளர் கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கிரிராஜ் சிங் பேசியதாவது:-
அலங்கார மீன்வளர்ப்பு முனையம்
அலங்கார மீன்வளர்ப்பு துறையில் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் ஒரு லட்சம் கோடி
ரூபாய்க்கு இருக்கிறது. தமிழகத்தில் அலங்கார மீன் வளர்ப்பு வாய்ப்புகளை
பயன்படுத்தி மீனவ மக்கள் தங்களது பொருளாதார நிலைமையை உயர்த்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து அலங்கார மீன்வளர்ப்பு முனையம் திட்டத்தை
செயல்படுத்தும். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அமையும் அலங்காரமீன்வளர்ப்பு முனையம் மீனவர்களுக்கு நிச்சயம் வரபிரசாதமாக அமையும். படப்பையில் அமைய உள்ள நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் ஒரு ஆண்டுக்குள் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடல் பாசி வளர்ப்புக்கு...
நரேந்திர மோடி அரசு பதவியேற்றது முதல் மீன்வளத் துறைக்கு தனி கவனம்
செலுத்தி வருகிறது. 1947-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மீன்வள துறைக்கு
ரூ.3 ஆயிரத்து 780 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. மோடி
அரசு பதவியேற்ற பிறகு, கடந்த 6 ஆண்டுகளில், ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
கடல் பாசி வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். இதை மகளிர்
மட்டுமல்லாது அனைவரும் பயன்படுத்தி வளம் பெற வேண்டும். கரையில் இருந்து 1
கி.மீ. தூரத்தில் கடலில் கூண்டுக்குள் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு
மீனவர்களுக்கு உதவும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர
உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வரை மாத வருமானம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வு
அதனைத்தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள்
தனிமைப்படுத்தும் மையத்தை கிரிராஜ் சிங் நேரில் பார்வையிட்டார். பின்னர்
முட்டுகாட்டிலுள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் நடந்துவரும்
பல்வேறு ஆய்வு பணிகளை நேரில் பார்வையிட்டார். அங்குள்ள மூத்த அதிகாரிகளுடன் நிறுவன பணிகள் மற்றும் விரிவாக்கம் குறித்து ஆலோசித்தார். தொடர்ந்து சென்னை மாதவரத்தில் உள்ள மீன்கள் வளர்ப்பு மையத்தை பார்வையிட்டார். பின்னர் மாதவரம் மத்திய பால் பண்ணைக்கு சென்ற அவர் ஆவின் தயாரிப்பு பொருட்களை ஆய்வு செய்தார். ஆவின் நிறுவனத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளுடனும் அவர் ஆலோசித்தார்.
மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.