சென்னை
தெற்கு இலங்கைக்கும், கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவுக்கும் இடையே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறியது. இன்று காலை தென் கிழக்கு அரபிக்கடலில் மினிகாய் தீவில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்தில் இருந்து 330 கி.மீட்டர் தொலைவிலும் மாலத்தீவு அருகே புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.இதுவரை இல்லாத வகையில் அசாதாரண வகையில் நகர்கிறது. இதனால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் காரணமாக நேற்று முதல் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மாவட் டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் இரவு 10 மணி அளவில் இடி-மின்னல், சூறை காற்றுடன் பலத்த மழை கொட்டியது. மயிலாடியில் அதிகபட்சமாக 3.5 செ.மீ. அளவிற்கு மழை பெய்தது.
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வு வழக்கம்போல் நடைபெறும். எனவே தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள் வழக்கம்போல் தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி யுள்ளது.
தூத்துக்குடி துறை முகத்தில் 3-ம் புயல் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 3-வது நாளாக விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலுக்கு செல்லவில்லை.நெல்லை மாவட்டத்தில் உவரி, கூட்டப்பனை, இடிந்த கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் 600-க்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றிருந்தனர். இதில் 15 படகுகளுக்கு புயல் பற்றிய தகவல் தெரிய வந்ததை தொடர்ந்து அந்த படகுகளில் சென்றவர்கள் லட்சத்தீவு, கோவா, கர்நாடகாவின் கார்வார் துறைமுகங்களில் கரை ஒதுங்கினர்.
இன்னும் 35-க்கும் மேற்பட்ட படகுகள் கரை ஒதுங்கிய தகவல் கிடைக்க வில்லை. இந்த படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். அவர்கள் கடலில் வீசிய சூறைக்காற்றில் சிக்கிக் கொண்டனரா? என்று தெரியவில்லை.
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசத்திரன் கூறியதாவது:-
குறைந்த கற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக மத்திய கிழக்கு அரபிக் கடலில் வலுவிழக்கக் கூடும். குமரி கடல்பகுதியில் மணிக்கு 40 - 50கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்.கேரளா, லட்சத்தீவு பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம்.
அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.என கூறி உள்ளார்.