சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றியதால் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு பிறகே வாகனங்களை திரும்ப பெற முடியும் என காவல்துறை கூறினாலும், கொரோனா பரவலால் முக்கிய வழக்குகளை மட்டுமே நீதிமன்றம் விசாரித்து வருவதால் வாகனங்களை திரும்ப பெறுவதற்கான கால அளவு தெரியாமல் உள்ளது.
இக்கட்டான சூழலில், பொது போக்குவரத்து இல்லை எனும்பட்சத்தில், அத்தியாவசிய தேவைகளுக்கும், குடும்பத்தாரின் மருத்துவ உதவிகளுக்கும் சுய வாகனத்தையே அடித்தட்டு மக்கள் பயன்படுத்த முடியும் என்பதால், அவர்களிடம் மன்னிப்பும், உத்தரவாத கடிதமும் பெற்றுக்கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப வழங்க தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.