சென்னை,
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் ரஞ்சித்குமார் அளித்த பேட்டி வருமாறு:-
அமைச்சர் விஜயின் 52-வது பிறந்தநாள் வரும் 22-ந்தேதி வருகிறது. அதை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி , 22-ந் தேதி (திங்கள்கிழமை) ஆகிய 2 நாட்கள் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், வேலூர் மாவட்டம் அமிர்தி, சேலம் குரும்பட்டி ஆகிய இடங்களில் உள்ள வன உயிரியல் பூங்காக்களில் சிறியவர் முதல் பெரியவர் வரை நுழைவுக் கட்டணமில்லாமல் உள்ளே சென்று பார்வையிடலாம்.அதற்கான அனுமதி சீட்டை வழக்கம் போல் ஆன்லையில் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை, நான் எனது சகோதரருடன் இணைந்து நடத்தும் வாழ்முனி நாயக்கர் குடும்ப அறக்கட்டளை செலுத்திவிடும். இரண்டு நாட்களுக்கான கட்டணம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக வரும் என்று தெரிகிறது. அன்பின் அடிப்படையில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளேன்
குழந்தைகள்தான் எங்கள் தெய்வங்கள். எங்களுக்கு வெற்றி கிடைப்பதற்கு குழந்தைகள் காரணம். அவர்களின் மகிழ்ச்சிக்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம். முதல்-அமைச்சரின் பிறந்த நாளன்று தலைமை செயலகத்தில் மரம் நட இடத்தை தேர்வு செய்து வருகிறோம். 22-ந் தேதி காலையில் அந்த நிகழ்ச்சி நடக்கும்.
அன்று காஞ்சீபுரத்தில் வனத்துறை சார்பில் 52 ஆயிரம் மரகன்றுகள் நடவுள்ளோம். கிண்டி காந்தி மண்டபத்திலுள்ள பூங்கா சிறியது. அங்கு அனுமதித்தால் கூட்டம் அளவு அதிகமாக சேர்ந்துவிடும். எனவே அதை தேர்வு செய்யவில்லை.வண்டலூர் பூங்காவில் ஒரு நுழைவுச் சீட்டுக்கு ரூ.200 ஆகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் பேட்டரி வண்டிகளை இலவசமாக ஏற்பாடு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.