சென்னை,
சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய இயக்குனர் அலுவலகம் மற்றும் நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்குள்ள 2-வது தளத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களை பணியில் அமர்த்தி உள்ளனர்.
இதில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான காந்தி கன்னியப்பன் (வயது57) என்பவர் பாதுகாவலராக கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.நேற்று இரவு அவருக்கு இரவு பணி வழங்கப்பட்டு இருந்தது. அவர் சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் உள்ள 2-வது தளத்தில் பணியில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அங்கு பணிக்கு வந்த மற்றொரு ஊழியர், பணியில் இருந்த காந்தி கன்னியப்பன் மாயமாகி இருப்பதை கண்டு தேடினார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் காந்தி கன்னியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.