தமிழக செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் மறைவு - ஜோதிமணி இரங்கல்

தன் வாழ்நாள் முழுவதையும் காங்கிரஸ் இயக்கத்திற்காகவும் மக்களுக்காகவுமே அர்ப்பணித்தவர்.

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு ஜோதிமணி இரங்கல் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

சுதர்சன நாச்சியப்பன் மறைவு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலரும், முன்னாள் மத்திய இணை மந்திரியுமான மூத்த தலைவர் டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் அளவற்ற துயரமும் அளிக்கிறது. இளம் வயதிலேயே காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு, தன் வாழ்நாள் முழுவதையும் காங்கிரஸ் இயக்கத்திற்காகவும் மக்களுக்காகவுமே அர்ப்பணித்தவர்.

நாடாளுமன்றத்திலும் பொதுவெளியிலும் விளிம்புநிலை மக்களின் குரலாகவும், பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டு உரிமைகளின் பாதுகாவலராக அவர் ஆற்றிய பணிகள் வரலாற்றில் நிலைத்திருக்கும். அவரை நேரில் சந்திக்கும்போதெல்லாம், எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் முகத்தில் மாறாத புன்னகையோடு, அமைதியாகவும் நிதானமாகவும் அவர் கையாள்வதைக் கண்டு வியந்ததுண்டு. அந்தப் பக்குவமும் கனிவான பண்பும் இன்று அவர் நம்மிடையே இல்லை என்ற நினைவை தாங்க முடியாததாக்குகிறது.

ஆழ்ந்த இரங்கல்

இயக்கத்தின் மீது கொண்ட பற்றால் அவர் வழங்கும் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் எப்போதும் விலைமதிப்பற்றவை. அவரது இழப்பு காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் எனக்கும் ஈடுசெய்ய முடியாதது. அன்னாரை இழந்து வாடும் அவரது அன்பு மகன் ஜெயசிம்மா அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT