தமிழக செய்திகள்

சென்னையில் சொத்து வரி 4 மடங்கு உயர்வா? - மாநகராட்சி ஆணையர் விளக்கம்

மேல்முறையீடுகள் 30 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று காலை அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சொத்து வரி

சென்னை மாநகராட்சியின் பிரதான வரி வருவாயாக சொத்து வரி உள்ளது. இதன் மூலமே, சென்னை மாநகருக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பைகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம், நோய்த் தடுப்புப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் சொத்துவரி 3 முதல் 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று காலை அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூபாய் 5,000 சொத்து வரி கட்டிய கட்டிட உரிமையாளருக்கு தற்போது ரூ.28,000 சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வித காரணமும் இன்றி முறையான அறிவிப்பு இல்லாமல் சொத்து வரியை 4 மடங்கு உயர்த்தி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 3 முதல் 4 மடங்கு அதிகரித்தது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.

யாரும் நம்ப வேண்டாம்

இந்நிலையில், சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்று மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு வரி செலுத்தி வந்த சொத்து உரிமையாளர்களுக்கு மட்டுமே தற்போதைய மறுஅளவீட்டின் படி திருத்தப்பட்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி மதிப்பீட்டு திருத்தம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டு ஆணையினை பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் சொத்து உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்யலாம். அத்தகைய மேல்முறையீடுகள் 30 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படும். எனவே, அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் பொய்யான மற்றும் ஆதாரமற்ற வதந்திகளைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.