பயிற்சி வகுப்பு
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்ட படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சிக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மேலும், இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இணையதளம்
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும், தேர்வு நடைபெறும் முறை நேரிடையாகவும் நடைபெறும். விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சட்ட படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவு தேர்வுகளுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்படும். பொது மற்றும் சட்ட படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வுகளான நேர்காணல், குழு விவாதம், எழுத்துத்தேர்வு, ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்பயிற்சிக்கான கட்டணமும் தாட்கோவால் வழங்கப்படும். எனவே, தேர்விற்கு பயிற்சிப்பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.