சென்னை,
'நீட்' தேர்வு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித் துறை சிறப்பு பயிற்சி வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், பிளஸ்-2 பொதுத் தேர்வையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தேர்வு நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட அரசு பள்ளிகளில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் மட்டும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 360 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுத இருக்கின்றனர்.அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக சென்னை அசோக்நகர், வில்லிவாக்கம், வேளச்சேரி, திருவல்லிக்கேணி அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று பயன் அடைந்து வருகின்றனர்.